தாஜ்மஹாலில் பார்வையாளர்கள் கட்டணம் ரூ.200 அதிகரிப்பு MakkalPost

தாஜ் மஹாலில் பார்வையாளர்கள் கட்டணம் திங்கள்கிழமை முதல் ரூ.200 உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஆக்ராவிலுள்ள இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் தலைமை தொல்லியல் ஆய்வுத்துறை கண்காணிப்பாளர் வசந்த் ஸ்வார்நகர் அறிவிப்பு:17-ஆவது நூற்றாண்டு நினைவுச்சின்னமான தாஜ்மஹாலின் முன்பு உள்ள சமாதி பகுதியை பார்வையிடும் உள்நாட்டு பார்வையாளர்களின் கட்டணம் ரூ.250 ஆகவும், வெளிநாட்டினருக்கான கட்டணம் ரூ.1,300 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம் தெற்காசிய நாடுகளான சார்க் அமைப்பு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கட்டணம் ரூ.540லிருந்து ரூ.740 -ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ரூ.50 கட்டணம் செலுத்தும் உள்நாட்டு பார்வையாளர்கள் முன்னால் அமைந்துள்ள சமாதியின் முக்கிய வாசல் வழியாக அனுமதிக்கப்படாமல், தாஜ்மஹாலின் பின்வாசல் வழியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் சமாதியைக் காணவும், அவ்வழியே செல்லவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
புதிதாக டிக்கெட் விநியோகிக்கும் முறை மூலம் முக்கிய வாசல் வழியே நுழைந்து சமாதிக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முகலாயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட தாஜ்மஹால் முகலாயர்களின் கட்டட கலைக்கு சான்றாக அமைந்துள்ளது. கடந்த 1983ஆம் ஆண்டு யுனெஸ்கோ இதனை உலகப் பாரம்பரிய சின்னமாக அங்கீகரித்தது, இந்தியாவில் உள்ள முஸ்லீம் கலையின் அணிகலன் என்றும் அதிசயிக்கத்தக்க உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்று என்றும் வர்ணித்துள்ளது.