கொடைக்கானல் செல்ல திட்டமிடுவோர் கவனத்துக்கு! MakkalPost

கோடைக்காலம் தொடங்கியதில் இருந்தே கொடைக்கானலில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.
கொடைக்கானலில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்ததால் கடந்த இரு நாட்களாக சீதோஷ்ண நிலை மாறி, குளுமையான சூழல் நிலவியது.
கடந்த மாதம் கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருந்த கட்டடங்களை நீதிமன்ற உத்தரவின்படி நகராட்சி அதிகாரிகள் "சீல்’ வைத்து வந்தனர். இதனால் பயணிகள் வருகை வெகுவாக குறைந்து காணப்பட்டது.
மார்ச் மாதம் சீசன் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு இடங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
பள்ளி மாணவர்கள், சுற்றுலா பயணிகள் வெள்ளி நீர்வீழ்ச்சி, பசுமைப் பள்ளத்தாக்கு, தூண்பாறை, குணா குகை, கோக்கர்ஸ்வாக், பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களை கண்டு மகிழ்ந்தனர்.
மாலை நேரங்களில் கொடைக்கானல் ஏரியில் படகு சவாரியும், ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் சவாரியும் செய்து மகிழ்ந்தனர்.
விடுதி கட்டண உயர்வால் அவதி: கொடைக்கானலில் விதிமீறல் கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால், எஞ்சியுள்ள விடுதிகளில் வழக்கத்தைவிட கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன. இதனால், சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
எனவே கொடைக்கானல் வர திட்டமிடுவதாக இருந்தால் வார இறுதி நாட்களை விட வார நாட்களில் வருவது நல்லது.
மேலும், சுற்றுலாவுக்கு திட்டமிடும் போது முன்கூட்டியே விடுதிகளில் அறைகளை வாடகைக்கு எடுத்துக்கொள்வது அல்லது அதிக வாடகைக்கு கொடுக்க தயாராக இருப்பது நல்லது.