ரத்த நாளங்களில் பிளாஸ்டிக் துகள்கள்: மாரடைப்பு, பக்கவாத அபாயம்! MakkalPost

புது தில்லி: சுற்றுச்சூழலில் இருக்கும் சிறு பிளாஸ்டிக் துகள்கள், நமது உடலுக்குள் நுழைந்து, ரத்த நாளங்களில் பயணிப்பதால், மாரடைப்பு, பக்கவாத அபாயங்கள் நேரிடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இத்தாலியில் உள்ள கம்பானியா லுய்கி வான்விடெல்லி பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், கரோடிட் தமனியில் ஏற்படும் கொழுப்பு அடைப்புகளை அகற்றும் அறுவைசிகிச்சை செய்துகொண்ட 257 நோயாளிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். கரோடிட் தமனி என்பது, கழுத்தின் பக்கவாட்டில் இருந்துகொண்டு, மூளைக்கு ரத்தத்தை எடுத்துச் செல்கிறது.
இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனியில் கொழுப்புகள் சேர்கிறதோ அதுபோலவே கரோடிட் தமனியிலும் கொழுப்புகள் சேர்ந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதுபோல தமனியில் அடைப்புகள் ஏற்படும் போது அவை, ரத்த ஓட்டத்தை தடை செய்து மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது.
நியூ இங்கிலாந்து மருத்துவ இதழில் வெளியான ஆய்வறிக்கையில், அறுவைசிகிச்சைக்குள்ளான 257 நோயாளிகளின் தமனியிலிருந்து அகற்றப்பட்ட கொழுப்புப் படலத்தில் 5 மில்லி மீட்டருக்கும் குறைவான அளவு மைக்ரோ பிளாஸ்டிக் எனப்படும் நுண்துகள்கள் மற்றும் நானோபிளாஸ்டிக் அல்லது 1000 நானோமீட்டர்கள் சிறியதான துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்ல, பாலிவினால் குளோரைடு எனப்படும் துகள்களும் அந்த திசுப் படலத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், 1000 நானோ மீட்டர்களை விட சிறிய பிளாஸ்டிக் துகள்கள் இருந்த படலங்கள் இளைஞர்களுக்கே அதிகம். பெரும்பாலும் ஆண்களாகவும் நீரிழிவு நோயாளிகளாகவும் இதய நோய் இருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தற்போது, தமனி நாளின் திசுப் படலத்தில் உறுதியான பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், இதய நோய் பாதிப்பு தொடங்கி 34 மாதங்களாக அவர்களின் உடலாநிலை ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
அதில், பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருந்தவர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தாத மாரடைப்பு அல்லது பக்கவாதம் அல்லது இதில் எந்தக் காரணியும் இல்லாமல் மரணம் ஏற்படுவதற்கான அபாயம் 4.5 மடங்கு அதிகம் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன் மூலம், நமது சுற்றுச்சூழலில் கலந்திருக்கும் பிளாஸ்டிக் துகள்கள், உடலுக்குள் செல்லாமல் தடுக்க, அதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்பதை அபாய எச்சரிக்கையாக உணர்த்துகிறது என்ற மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.